சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
ஆனால், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களின் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் எந்தவித நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு ஐயமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
முன்னதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். " `சத்துணவுத் திட்ட சீரமைப்பு’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக் கூறியிருந்தார்.
3 கி.மீ சுற்றளவில் இருக்கும் அனைத்து சத்துணவு மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து, கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும்" எனக் கூறியிருந்தார். சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால், அரசு அதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், அத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/