புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைய நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதல்- அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதுவே தற்போதும் அது நடை முறையில் இருந்து வருகிறது.
அதன்படி மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் சில மாதங்கள் கழித்து முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது புதுச்சேரியில் வழக்கமாகி விட்டது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். அதன்பின் அடுத்த 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) அரசின் செலவினங்களுக்காக முன்அனுமதிகோரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.
இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் இன்று சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்க சபாநாயகர் வைத்திலிங்கம் முன்பே மறுப்பு தெரிவித்து விட்டார். இரண்டு தினங்களுக்கு முன்புதான், நியமன எம்.எல்.ஏ.கள் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் ஏற்கவில்லை.
இதனை தொடர்ந்து 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.