மகாத்மா காந்தியின் மிகவும் பிரபலமான பொன்மொழியான செய் அல்லது செத்துமடி என்ற பொன்மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமொழியாக மாற்றி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே அதிகம் பேச மாட்டேன். செயலில் நம்முடைய திறமையை நாம் காட்டிட வேண்டும். ஒரு பொன்மொழி உண்டு பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என்று. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு Do or Die,செய் அல்லது செத்து மடி என்பார்கள். நான் அதைக்கூட அந்த வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்ய வேண்டும் என சொன்னால், என்னைப் பொறுத்த வரையில், Do and Die, செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன். செய்துமுடித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் எனது கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.
அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை. அதை சொவதற்காகத்தான் நான் இப்போது வந்திருக்கிறேன். திமுக ஆட்சி என்பது அரசு ஊழியர்களின் பொற்கால ஆட்சியாக அமைந்திருக்கிறது.
நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும்.
அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்; அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.