சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்த பெருநகர் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருகிற நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று புதிய கட்டுப்பாடுகளையும் நிலையான வழிகாட்டு நெறிகளையும் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சென்னையில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தற்போது கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் நோய்த்தொற்று பரவலை தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
- அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினை எப்பொழுதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- கடைகள்/வணிக வளாகம்/அலுவலகம்/ பணியிடங்களின் முகப்பு வாயிலில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், மல்டி விட்டமின், மாத்திரை ஜிங்க் மாத்திரை போன்றவை நிறுவன உரிமையாளரால் வழங்கப்படவேண்டும்.
- கடைகள்/வணிக வளாகம்/அலுவலகம்/ பணியிடத்தில் கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், கைப்பிடி, மேஜை நாற்காலிகள் மற்றும் வாஷ்ரூம் சாதனங்கள் போன்றவற்றிலும் அலுவலக வளாகம் மற்றும் பொது இடங்களில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும்.
- வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கடைகள் ஆகியவற்றில் முகப்பு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் பேப்பர் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- Fingertip Pulse Oximeter கருவி கடை நிறுவனம் அலுவலகம் பணியிடத்தில் வைத்திருக்க வேண்டும்.
- பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம்/கடை/அலுவலகம் உரிமையாளரிடமிருந்து அதற்கான அபராதத் தொகை வசூலிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து இரண்டு முறைக்குமேல் விதிகளை மீறினால் நிறுவனம்/கடை/அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட வேண்டும்.
- எனவே, நோய் பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் தனிநபர்/கடைகள் அலுவலகம்/வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முழு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேற்படி நிபந்தனைகளை மீறுபவர்ககளிடமிருந்து அரசாணையின்படி பின்வருமாறு அட்டவணையின்படி அபராதத் தொகை வசூலிக்கப்பட வேண்டும்.
குவாரண்டைன் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
பொது இடங்களில் கூட்டம் கூடினால், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
சலூன்கள், ஸ்பா, உடற்பயிற்சி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசாங்கத்தால் விதிக்கபட்ட விதிமுறைகளை மீறும் தனிமனிதர்களிடம் இருந்து ரூ.500, வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அபராதத் தொகையினை வசூலிக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அபராதம் வசூலிப்படில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.