ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராவதில் இருந்து மீண்டும் விலக்கு பெற்றுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக இதுவரை பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. இந்த நிலையில், 5வது முறையாக பிப்ரவரி 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், பட்ஜெட் கூட்டம் தொடர்பான பணி காரணமாக ஆஜராவதில் இருந்து ஓ.பி.எஸ் விலக்கு கேட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் பிப்ரவரி 19ம் தேதி மீண்டும் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் இன்று காலை 11 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் ஆஜராவதில் விலக்கு கேட்டு ஆணையத்தில் திடீரென மனு தாக்கல் செய்தார். இதன் மூலம் இன்று அவர் ஆஜராகவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதுவரை அவருக்கு 6 முறை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர், ஆஜராவதில் இருந்து தொடர்ந்து விலக்கு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - AIADMK - PMK Alliance Talk Live Updates: பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு! பாஜக கணக்கை இறுதி செய்ய சென்னை வந்த பியூஷ் கோயல்