தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் ராட்சத கிணறு வெட்டப்பட்டது.
இதனால் மக்களின் நீர் ஆதாரமான ஊராட்சிக்கு சொந்தமான பொதுக் கிணறு வற்றிவிட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
பல கட்ட போராட்டத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் நேரில் வந்து கிராமக் கமிட்டி குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிணற்றை ஊராட்சிக்கு விற்பனை செய்வதாகக் கூறியவர், பின்னர் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் நிலம் மற்றும் கிணற்றை விற்பனை செய்தார்.
கிணற்றை கிராம மக்களுக்கு வழங்காமல் ஓ.பன்னீர் செல்வம் வேறு ஒருவருக்கு வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே உறுதி அளித்தபடி, ராட்சதகிணறு, போர்வெல் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 சென்ட் நிலத்தை ஊர்மக்கள் பயன்பாட்டிற்காக லட்சுமிபுரம் ஊராட்சிக்கு தானமாக தர ஓ.பி.எஸ். சம்மதித்ததை அடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கான பத்திரப்பதிவு ஜூலை 31-ஆம் தேதி பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் கூறியபோது, "பொதுச் சொத்தாக எழுதி வைப்பதால், பத்திரச் செலவு அதிகம் இருக்காது. பதிவு செய்வதற்கு கிராமக் கமிட்டி தரப்பில் யாரும் செல்லத் தேவையில்லை. பதிவு செய்த பத்திரத்தை அரசிடம் ஒப்படைக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடுவர்.
இதன் பிறகு கிராமக் கமிட்டி சார்பில் ஊர்மக்கள் கூட்டத்தை கூட்டி, கிணறு ஊராட்சிக்கு பதிவு செய்யப்பட்டது குறித்த தகவலை தெரிவித்து, கிணறு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம்" என்றார்.