தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ. ராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுகொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை தான் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.