துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை முதல்வர் இ.பி.எஸ் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கூட்டறிக்கை மூலம் உறுதி செய்துள்ளனர்.
அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா 4 நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவிற்குள் மீண்டும் சலசலப்பு தொடங்கியது.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ராஜா நீக்கப்பட்டார் என மேலோட்டமாக தகவல் வெளியானாலும் உண்மை அது இல்லை என்று மற்றொரு தகவலும் கூடவே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. ராஜா டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஓபிஎஸ்ஸூக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த சலசலப்பிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை அ.தி.மு.க சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தனது செயலுக்காக ஓ.ராஜா நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டதாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.