Officials rush to make sure Chennai doesn’t run out of Covid beds : ஸ்டான்லி மற்றும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், அத்திப்பட்டு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டிடம் அங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. 4600 நோயாளிகளுக்கு அங்கே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரோனா தொற்று 5000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 482 நபர்கள் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக அங்கே இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை 525 ஆகும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 276 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிராந்திய கண் சிகிச்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 250 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தல் வசதி இல்லாத இளைஞர்கள் இங்கே அனுமதிக்கப்படுவார்கள்.
ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 1000 படுக்கைகள் காலியாக உள்ளது என்றும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது முதியவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.
143 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் செனாய் நகரில் இருக்கும் பில்ரோத் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. காவிரி மற்றும் பிரசாந்த் மருத்துவமனையில் 100% படுக்கை வசதிகள் நிரம்பிவிட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுமார் 15% நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அதே போன்று 30% பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. மாறுபட்டிருக்கும் கொரோனா பரவலின் தீவிரம் எத்தகையது என்பதை முன் கூட்டியே கணிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil