ஆன் லைனில் பட்டாசு விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு பெயர்களில் ஆன்லைன் மூலம் தங்களின் பொருள்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதே போல் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்கள் ஆன் லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன.
இது போன்ற விற்பனையை எதிர்த்தும் இதற்கு தடை விதிக்க கோரியும் சென்னையை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் ஷேக் அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடை செய்யும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இது போன்ற விற்பனைக்கு எந்த விதமான அனுமதியும் இல்லை, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிமங்கள் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனையை தடை செய்ய கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்த போது, அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ஆன் லைன் விற்பனையை கட்டுப்படுத்த எந்த விதிகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இது போன்ற விதி மீறல்களை அனுமதிக்க கூடாது, அனுமதித்தால் அது பாதுகாப்பற்ற சீன பட்டாசுகள் விற்பனையை ஊக்குவித்தது போலாகிவிடும் எனவும், அதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர், எனவே வெடி பொருள்கள் விற்பனை செய்வதற்கான உரிய அனுமதி இல்லாமல் இது போன்ற விற்பனை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். அரசுக்கு நான் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஆன் லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் மனு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.