எதிர்க்கட்சிகள் எத்தனை கூக்குரல் போட்டாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிறு) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளைம்-ஈரோடு இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இன்றைக்கு எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான பிரச்சாரத்தை சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். ஒரு பொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால், மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எண்ணுகிறார்கள், அது நிச்சயமாக நடக்காது.
ஏனென்றால், நாங்களே திட்டத்தை அறிவித்து, நாங்களே திறந்து வைக்கின்ற காட்சியை அண்ணா திமுக-வில் தான் பார்க்க முடியும். ஒவ்வொரு திட்டமும் அம்மாவிடைய ஆட்சியிலே உருவாக்கப்பட்ட திட்டம்தான்.
2011க்கு முன்பு பாருங்கள், என்ன அவர்கள் செய்தார்கள்? ஒன்றையும் கொண்டு வரவில்லை. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு எல்லா ஊடகங்களிலும், எல்லா மேடைகளிலுமே இந்த ஆட்சி, செயலிழந்த ஆட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சொல்வதெல்லாம் அம்மாவினுடைய அரசு, செயல்படும் அரசு என்பதை நாங்கள் இப்பொழுது நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.
வேண்டுமென்றே திட்டமிட்டு, இந்த ஆட்சி மீது ஏதாவது ஒரு களங்கம் கற்பிக்க வேண்டும், எதையாவது ஒன்றை கண்டுபிடித்து, ஒரு போராட்டத்தை உருவாக்கி, அதன்மூலம் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இன்றைக்கு செயலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், புரட்சித்தலைவி அம்மா விட்டுச் சென்ற பணியை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
இன்னும் ஒருபடி மேலே போய், சொல்கிறார், இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டிய ஆட்சி, இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என்று, எங்கே சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போனது சொல்லுங்கள் பார்க்கலாம். இன்றைக்கு இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
ஆனால் மற்ற மாநிலத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். இவர்கள் சட்டமன்றத்திலே பேசினார்கள், பல புள்ளிவிவரங்களையெல்லாம் கொடுத்தார்கள். நாஙகள், காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அதற்குத் தகுந்த பதில்களை நாங்கள் கொடுத்தோம்.
தமிழகத்திலே புரட்சித்தலைவி அம்மா ஆட்சிசெய்த பொழுதும் சரி, அம்மா மறைவிற்குப் பிறகு அம்மாவினுடைய திட்டங்களை நாங்கள் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம், அம்மா விட்டுச்சென்ற பணியை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சட்டம்,ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்படுகின்ற ஆட்சி, அம்மாவினுடைய ஆட்சி. இன்றைக்கு வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு சட்டம், ஒழுங்கு கிடையாது.
இவர்களுக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை, பூதக்கண்ணாடி வைத்து தேடித்தேடி பார்க்கிறார்கள், ஏதாவது குறையை கண்டுபிடித்து பேசலாம் என்றால். எந்தக்குறையும் காணமுடியாத அரசு அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். எத்தனை எதிர்க்கட்சிகள் கூக்குரல் இட்டாலும் அம்மாவினுடைய ஆட்சியை வீழ்த்தவோ, அசைக்கவோ முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.