முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று மாலை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம், NEET தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ் தனது ட்விட்டரில், "உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும். வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்தும் அப்போதுதான் முடிவு செய்யப்படும்" என பதிவிட்டுள்ளார்.
நேற்று, பிரதமரை நேரில் பன்னீர் சந்தித்ததற்கு பல காரணங்கள் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்று பன்னீர் செல்வத்தின் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பாஜக தான் பின்னால் இருந்து பன்னீரை இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.