அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஓ.பி.எஸ் அணியிலிருந்த கோவை செல்வராஜ் அ.தி.மு.கவில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தங்கள் சுயலாபத்திற்காக சண்டையிட்டு வருகின்றனர். அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்த 34-வது நாள் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என சில மருத்துவர்கள் கூறினர். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் இது கூறப்பட்டுள்ளது. பன்னீர் செல்வமும் இதை கூறியுள்ளார்.
அப்போதைய தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறையிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் குழு தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது ஏன் இந்த பிரச்னையை கோவை செல்வராஜ் கிளறுகிறார் என தெரியவில்லை" என்று கூறினார்.