தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மலேசிய இறக்குமதி மணலை பயன்படுத்த நீதிமன்றம் கூறியது.
தமிழ்நாடு முழுவதும் ஆற்றுப் படுகைகளில் அரசு சார்பில் குவாரிகள் திறக்கப்படுகின்றன. அரசு விதிமுறைகளை மீறி இந்தக் குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால், பெரும்பாலான தமிழக ஆறுகள் தங்களின் நீர்வளத்தை இழந்துவிட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் ஆறுகளை சுரண்டி அண்டை மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் மணல் ஏற்றுமதி செய்யும் வேலையை மணல் கொள்ளையர்கள் செய்து வந்தனர்.
இந்தக் கொள்ளைகளுக்கு மாறாக முதல் முறையாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு ஆற்று மணலை இறக்குமதி செய்தது. மொத்தம் 55 ஆயிரம் டன் ஆற்று மணல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அன்னா டோரோதியா என்ற கப்பல் மூலமாக இந்த மணலைக் கொண்டு வந்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தமிழக ஆறுகளில் சுரண்டி விற்கப்படும் மணலைவிட இது மலிவாக கிடைத்ததுதான் குறிப்பிடத்தக்க அம்சம்!
இப்படி மலேசியாவில் இருந்து மலிவு விலையில் மணல் வந்து சேர்ந்ததும் தமிழக மணல் கொள்ளையர்கள் அதிர்ந்தனர். அந்த மணலை சாலைகள் வழியாக எடுத்துச் செல்ல அனுமதி பெறவில்லை என்கிற உப்புச்சப்பில்லாத காரணத்தை குறிப்பிட்டு அந்த மணலை துறைமுகத்தில் முடக்கி வைத்தார்கள் அதிகாரிகள்.
இந்தச் சூழலில் புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா, இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இறக்குமதி மணலை பயன்படுத்த அனுமதி கோரினார் அவர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மகாதேவன் அதிரடியான உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் ஆற்று மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட அதிரடியாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருங்கால சந்ததியினரின் நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார். கட்டுமானத் தேவைகளுக்கு இறக்குமதி மணலை பயன்படுத்திக் கொள்ளும்படி உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது. புதிதாக மணல் குவாரிகளை திறக்கவும் அரசுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக ஆறுகளில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு இந்த உத்தரவு கடிவாளம் போட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.