பட்டப்பகலில் நீங்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது, சிலர் கையில் பெரிய பெரிய சைஸில் பட்டா கத்தியுடன் ஆவேசமாக உங்களை நோக்கி வருகிறார்கள். வந்த வேகத்தில் உங்களை நோக்கி கத்திய வீச, அலறிய நீங்கள் அப்படியே முகத்தை மூடிக் கொள்ள, உங்கள் பின்னால் நின்றுக் கொண்டிருந்த நபரை அவர்கள் வெட்டத் தொடங்குகிறார்கள். அந்த நொடி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏதோ படத்தின் காட்சி போல இருக்கிறதா??
சென்னையில் இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்த கூத்து இது!.
பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அரும்பாக்கத்தை அடைந்த போது 'ரூட்டு தல' (பஸ் டே) தொடர்பாக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஒரு தரப்பினர், பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாக் கத்திகளை எடுத்து எதிர் தரப்பை தாக்கத் தொடங்கினர். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பயணிகள் அலற, டிரைவர் பேருந்தை அப்படியே நிறுத்துவிட்டார். ஆயுதங்களுடன் தாக்கத் தொடங்கியதால், எதிர் தரப்பு மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடிக்க, விடாமல் துரத்திய அந்தக் கும்பல் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியது.
ஆயுதங்களை ஏந்தியபடி சாலையில் அங்கும் இங்கும் நடமாடிய மாணவர்களால், பொதுமக்கள் பீதி அடைய, பேருந்தில் இருந்த பெண்கள் உயிரைக் கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் செல்வதற்குள், பட்டாக் கத்திகளுடன் அந்த மாணவர்கள் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் வசந்த் என்ற இரண்டாம் ஆண்டு மாணவருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டப் பகலில், நட்ட நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களின் இந்த அட்டூழியம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.