திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளாவை சேர்ந்த 40 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை கண்ணூர் தலசேரியில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரின் வாக்குமூலங்களை பதிவு செய்தது.
திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி. சந்திரன் மற்றும் பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழு தம்பதியின் அறிக்கைகளை தலசேரி உதவி ஆணையர் அலுவலகத்தில் 6 மணி நேரம் பதிவு செய்தது.
புகாரின்படி, ஜூன் 19ஆம் தேதி சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கணவர் மாலையில் உணவு வாங்க சென்றிருந்தபோது, மூன்று பேர் கொண்ட தன்னை கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சம்பந்தப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தலசேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கன்னூர் மாவட்ட காவல்துறை தலைவர் ஆர் இளங்கோ கூறுகையில், கேரள காவல்துறையினர் சேகரித்த விவரங்கள் மற்றும் பெண்ணின் 164 சிஆர்பிசி அறிக்கை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார். தம்பதியினர் அளித்த அறிக்கைகளில் தமிழக காவல்துறை ஆய்வுக் குழு, சில முரண்பாடுகளைக் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil