பாஞ்சாங்குளத்தில் தலித் குழந்தைகள் மீது சாதி பாகுபாடு கடைபிடிக்க காரணமான 5 பேர்களும் 6 மாதங்களுக்கு ஊருக்குள் நுழைய நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் மாநிலத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், தலித் குழந்தைகளுக்கு கடைகளில் எதுவும் கொடுக்கக் கூடாது என்று சாதி பாகுபாடு விதித்த சம்பவம், தொடர்பாக மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடித்ததாக 5 பேர்கள் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, பட்டியல் இனக் குழந்தைகள் மீது திண்டாமை கடைபிடிப்பதற்கு காரணமான குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேரும் பாஞ்சாங்குளம் ஊருக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரைக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், பாஞ்சாங்குளத்தில் பட்டியல் இனக் குழந்தைகள் மீது தீண்டாமை வன்கொடுமை கடைபிடிப்பதற்கு காரணமான மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேரும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"