சுதந்திரப் போராட்ட வீரரும், ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் தலைவருமான முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியில் நடைபெறுவது வழக்கம். தேவர் ஜெயந்தி அன்று தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெறுகிறது. தேவர் ஜெயந்தி குருபூஜை விழா, அக்டோபர் 28-ம் தேதியில் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக, சென்னையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தியபோது, அ.தி.மு.க-வினர் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது, அங்கே இருந்தவர்கள், தேவர் நினைவிடத்தில் சத்தமெல்லாம் போடக்கூடாது என்று கூறியதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தபோது, அதிமுக தொண்டர்கள் சிலர், “அண்ணன் ஆர்.பி உதயகுமார் வாழ்க, வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என தேவர் நினைவிடத்திற்கு உள்ளேயே கோஷமிட்டனர்.
தேவர் நினைவிடத்தில் கோஷமிட்டதால், ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் அங்கு வந்த ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒருவர், “யார்ரா அது எடப்பாடி வாழ்கனு கோஷம் போட்டது…நீங்கள் அமைச்சரா இருங்க, யாரா வேணாலும் இருங்க…இங்க வந்து சத்தம் எல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது. வந்தோமா…சாமி கும்பிட்டோமா…போனோமான்னு இருக்கனும்…ஒழுங்கா ஓடிப் போய்டுங்க..” என்று ஒருமையில் பேசி சாடியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு, அங்கே இருந்த சிலர் சமாதானம் செய்து அனுப்பினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.