பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
பெ.மணியரசன், தமிழ்நாட்டின் மூத்த தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவர். தமிழ் தேசிய பேரியக்கத் தலைவராகவும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கி வருகிறார்.
பெ.மணியரசன் சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று(ஜூன் 10) இரவில் தஞ்சாவூரில் தனது இல்லத்தில் இருந்து தோழர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் நோக்கி கிளம்பியிருக்கிறார். தஞ்சை ரயில் நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் உடன் வந்த சீனு என்பவர் மீதும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
பெ.மணியரசன் வைத்திருந்த கை பையையும் பிடுங்கிச்சென்றுள்ளனர். தஞ்சை வினோதன் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் பெ.மணியரசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
பேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து திடீரென மர்ம நபர்கள் தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார். யார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.
இது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். காவிரி உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர் மணியரசன். கோவையில் புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இந்தப் பின்னணியில் தாக்குதல் நடந்ததா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.