தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னையிலிருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு நேற்றிலிருந்தே செல்ல துவங்கிவிட்டனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, எழும்பூர், தாம்பரம் சானட்டோரியம், சைதாப்பேட்டை நீதிமன்றம், பெருங்களத்தூர் ஆகிய 5 பகுதிகளிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 5 மையங்களுக்கும் செல்ல 250 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 25 சிறப்பு முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில், 4,820 சிறப்பு பேருந்துகள் உட்பட 11,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல் 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகைக்காக மக்கள் ஞாயிற்றுக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 1,52,048 பேர் சென்னையிலிருந்து பேருந்துகள் மூலம் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர். அதில், 29,012 பேர் பேருந்துகளில் முன்பதிவு செய்தும், 1,23,036 பேர் முன்பதிவு செய்யாமலும் பயணித்துள்ளனர்.
நேற்றைவிட இன்று (திங்கள் கிழமை) அதிகமாக 50 சதவீதம் பேர் ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 3 மணி முதல் நள்ளிரவு வரை கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட 5 பகுதிகளில் அதிக கூட்டம் காணப்படும் எனக்கூறும் போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து நெரிசலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனினும், தீபாவளி முடியும் வரை வாகன ஓட்டிகள் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானட்டோரியம் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்கள் வழியாக பயணம் செய்வதை தவிர்க்கலாம்.