பெரம்பலூர் கலெக்டரின் பெற்றோர் பயணித்த அரசு வாகனம் மோதி இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ்-அலமேலு தம்பதியரின் மகள் கீர்த்தனா, சிறுவாச்சூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎட்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் கீர்த்தனா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். துறைமங்கலம் மூன்று சாலை பாலம் அருகே சென்ற போது, அரியலூர் நோக்கி சென்ற மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் பயணித்த அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்து நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த கீர்த்தனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கார் ஓட்டுநர் செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.