Periyar 141st birth anniversary: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஓயாத பிரச்சாரத்தால் சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்ட பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் தீண்டாமை, பெண்ணடிமை, மத மூடநம்பிகைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ஓயாத பிரச்சாரத்தை மேற்கொண்டவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய 141வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சென்று அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் தயாநிதிமாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்று பெரியாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பெரியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.