சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சின்ன போரூரை சேர்ந்த கதிரவன்(32) என்பவர் நேற்று இரவு மதுபானம் வாங்க வந்துள்ளார். அப்போது கடை ஊழியர் ராஜேந்திரன் பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி கடையை மூடி விட்டு மதுபானம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கதிரவன் தன்னுடைய வாகனத்தை எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டு எடுத்து வந்து மூடி இருந்த டாஸ்மாக் கடையின் மீது வீசியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர் மற்றும் கடை ஊழியர்கள் கதிரவனை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். வளசரவாக்கம் போலீசார் கதிரவனிடம் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் காரைக்குடி பள்ளத்தூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயமடைந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடையில் இருந்த பணம், மதுபானங்கள் தீயில் எரிந்து சேதமானது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்ததால் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்தாக கைது செய்யப்பட்டவர் கூறினார். டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/