நாட்டுக்கு சேவை செய்த போது ஊனமுற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவும் தேவை என்பதால், அவர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் தட்சிணாமூர்த்தி, ஜம்மு - காஷ்மீரில் பணியில் இருந்த போது, சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தன் காலை இழந்துள்ளார். மறுவாழ்வு நடவடிக்கையாக சென்னை ஆவடி படைப் பிரிவில் சாதாரண பணியில் அமர்த்தப்பட்ட அவரை, ஒடிசா மாநிலம் கஞ்சம் படைப்பிரிவுக்கு மாற்றி, சி.ஆர்.பி.எப். தலைமை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்தும், தொடர்ந்து ஆவடியிலேயே பணியாற்ற அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தட்சிணாமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, நாட்டுக்கு சேவை செய்த போது ஊனமுற்ற வீரர்களை பணியில் இருந்து நீக்காமல் மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் எளிதான பணிகளை வழங்குவது பாராட்டத்தக்கது... பணி அமர்த்திய படையின் ஆதரவு மட்டும் போதாது... குடும்பத்தினரின் ஆதரவும் தேவை என்பதை உணர்ந்து, அவர்களை சொந்த ஊருக்கு அருகிலேயே பணி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி, தட்சிணாமூர்த்தியின் பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.