முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிகத்தைச் சேர்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை மெரினா கடற்கரையில் ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தின் முடிவை ரத்து செய்து, மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகே மெரினா கடற்கரையில் சிலை அமைக்கும் அரசின் முடிவால் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IA மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IVA மற்றும் மெரினா கடற்கரையின் கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த திட்டம் கடலோர சுற்றுச்சூழலை சேதப்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையிலிருந்து வங்காள விரிகுடா கடலுக்குள் 360 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும். மார்ச் 22, 2016-ல் திருத்தப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அறிவிப்பின் பிரிவு 4 (ii) (ஜே) இன் கீழ் அரசு அனுமதி கோரியது. வங்காள விரிகுடாவில் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் தி.மு.க அரசின் திட்டம் குறித்து 4 ஆண்டுகளுக்குள் இறுதி சுற்றுச்சூழல் பாதிப்பு EIA/EMA அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னையில் இந்த நினைவுச் சின்னத்தை கட்டுவதற்கு போதுமான நிலம் உள்ளது. ஆனால், கடலுக்குள் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்டுகிறார்கள். இது மெரினா சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் இது கட்டப்படும்போது சுமார் 32 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“