தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை அமைச்சர் வேலுமணி பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான மசோதாவும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட மோசோதாவில், முதல் முறை ரூ.25,000, 2வது முறை ரூ.50,000, 3வது முறை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டுச் செல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 3 முறை அபராதம் விதித்த பிறகும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யபப்டும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.