urban civic polls : கொரோனா மூன்றாம் தொற்று அதிக கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை, கொரோனா தொற்று குறையும் வரை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர், மருத்துவர், நக்கீரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்கக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனு தொடர்பாக நக்கீரனின் வழக்கறிஞர் முதன்மை அமர்விடம் புதன்கிழமை அன்று குறிப்பிட்ட போது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தொற்றுநோய் நிலைமை சீராகும் வரை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 498 பேரூராட்சிகளுக்கான தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் நக்கீரன். மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடுவதையும் தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது எனவே தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை கட்டுபாட்டு மையங்களுக்குள் எடுத்து செல்வதில் சிரமம் இருக்கும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
24,199 கிராமங்கள், 28129 நகர்ப்புற வீதிகளும் தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 9,237 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறீவிக்கப்பட்டுள்ளது என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிசம்பர் 30ம் தேதி அன்று பாசிட்டிவிட்டி விகிதம் வெறும் 1% ஆகவே இருந்தது. ஆனால் ஜனவரி 17ம் தேதி அன்று அது 17% ஆக உயர்ந்துள்ளது என்றும் தன்னுடைய மனுவில் விளக்கி, தேர்தல்களை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil