தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (7.3.18) முதல் பிளஸ்1 பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகின்றன.
இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பொதுத்தேர்வில், 7 ஆயிரத்து 70 மேல்நிலை பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர்.
மாணவர்களை விட கூடுதலாக 58,897 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 49 ஆயிரத்து 422 பேரும், புதுச்சேரியில் 150 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 404 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்பட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட மெட்ரிக்குலேஷன் இயக்குநருக்கு பரிந்து செய்யப்படும் என்றும் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சியைச் சேர்ந்த 62 ஆண் சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர்.