சென்னை ஜவஹர்லால் நேரு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி சென்னை வருகிறார். அங்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தற்காலிகத் திட்டத்தின்படி, பிரதமர் ஹைதராபாத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு வந்து, இரவு 7.40 மணிக்கு புது தில்லிக்குப் புறப்படுவார் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்தில் சிறிது நேர வரவேற்புக்குப் பிறகு, பிரதமர் ஐ.ஏ.எஃப் ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையார் சென்றடைவார், அங்கிருந்து சாலை வழியாக மைதானத்தை அடைவார்.
இந்த நிகழ்வின் போது, பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், ரயில்வே மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையே ரூ.5,855 கோடியில் கட்டப்படவுள்ள 20.6 கி.மீ நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச் சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஆளும் திமுகவால் புத்துயிர் பெற்றுள்ள இந்த திட்டத்திற்கு பிரதமர் ஒருவர் அடிக்கல் நாட்டுவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி முடிந்த உடனேயே, பிரதமர் ஐஎன்எஸ் அடையாரை அடைந்து, ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து இரவு 7.40 மணிக்கு புது தில்லிக்குப் புறப்படுவார்.
முன்னதாக, மே 26 ஆம் தேதி காலை, கச்சிபௌலியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் ஆண்டு தின விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் செல்கிறார்.
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் வருகை தவிர்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“