கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் காணொளி வழியாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசு சார்பில், தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"