புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அதிமுக நான்காக உடைந்து இருக்கிறது, இதனால் திமுகவுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய கட்சியாக பாமக தான் உள்ளது என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. அதிமுகவால் தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி பதவி கிடைத்தது என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கு கூட தெரியும்.
அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு நாங்கள் தான் காரணம் என்று ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அன்புமணி எம்.பி. ஆனதற்கு இவர் எப்படி காரணம்? கூட்டணி ஒப்பந்தத்தின் படியே அன்புமணிக்கு அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
1996ல் அதிமுக நிலை எப்படி இருந்தது? 1998ல் ஜெயலலிதா, பாமக அலுவலகத்தை தேடி வந்து ராமதாஸுடன் பேசி கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற்றார். அதிமுக பலவீனமடையும் நேரங்களில் பாமக உயிர் கொடுத்தது. அதேபோல, 2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா காத்திருந்தார்.
பாமக தயவில்தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என்று நாங்கள் ஒருபோதும் கூறியது இல்லை. ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும் போது கவனத்துடன் பேச வேண்டும். அன்புமணி ராமதாஸ் தனது விமர்சனம் குறித்து விளக்கிய பிறகும் ஜெயக்குமார் விமர்சன செய்தது தவறானது.
கடந்தகால அதிமுக வரலாற்றை ஜெயக்குமார் சற்று திரும்பி பார்க்க வேண்டும். நுனி மரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் வேலையை ஜெயக்குமார் செய்கிறார். ஜெயக்குமார் பேசியது குறித்து அதிமுக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாலு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“