சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகனால் கைவிடப்பட்டு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த முதியவரை போலீஸ் ஒருவர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடபழனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்துரு கடந்த 17-ஆம் தேதி இரவு முருகன் கோவில் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த பிச்சைக்காரர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், முதியவர் ஒருவர் அழுதுகொண்டே சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து, அவரை அழைத்து இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரித்தார். அதற்கு அந்த முதியவர் மௌனமாக இருந்தார்.
இதனால், அருகிலுள்ள கடைக்காரர்களை சந்துரு விசாரித்துள்ளார். அப்போது, அந்த முதியவரை காரில் அழைத்துவந்து அவரது மகன் கோவிலில் பிச்சையெடுக்கவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த முதியவரிடம் விசாரிக்கையில் அவர் மந்தைவெளியை சேர்ந்த கோபால் (68) என்பதும், அவர் சிமெண் கலவை இயந்திர மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், மனைவி இறந்துவிட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக அவரது மகன் இல்லத்தில் வசித்துவந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாத முதியவரால் எந்த பயனும் இல்லை எனக்கருதி, அவருடைய மகன் அவரை கோவில் வாசலில் பிச்சை எடுக்கவிட்டு சென்றுவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, முதியவரின் உடல் நிலை தளர்ந்திருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார் இன்ஸ்பெக்டர் சந்துரு. அதன்பின், மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து முதியவருக்கு தேவையான உதவிகளை செய்துகொடுத்தார் சந்துரு.