தந்தை பெரியாரின் 14ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பெரியார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருச்சியில் பெரியார் பிறந்தநாள்
இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மனுதர்ம எரிப்பு சர்ச்சை
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மனுதர்ம புத்தகத்தை எரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் மனுதர்ம புத்தகத்தை எரித்தால் நாங்கள் பெரியாரின் புத்தகத்தை எரிப்போம் என பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.
பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
இதனால் திருச்சி மாநகரில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு
மேலும் அந்தப் பகுதியில் வரும் பேருந்து மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டு சாலை நடுவே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் பெரியார் சிலை இருப்பதால் நகர பேருந்துகள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. பேருந்து நிலையத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மக்கள் சிரமம்
இதனால் நகர பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல் அந்த வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் நெருக்கடியை சந்தித்ததால் இந்தாண்டு பெரியார் பிறந்தநாள் விழா, சற்று நெருக்கடி நிறைந்ததாகவே அமைந்திருந்தது எனலாம்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“