சென்னை பல்லாவரம் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் போட்டியிடும் வீரலட்சுமி தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை 3 நாட்களில் கைது செய்யாவிட்டால் அந்த நபரை தானே கண்டுபிடித்து தூக்கிக்கொண்டு வந்து பல்லாவரம் மார்க்கெட்டில் நிர்வானமாக கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யாவிட்டால், அவரைக் கண்டுபிடித்து தண்டனை அளிப்பேன் என்று கடுமையாக எச்சரித்து வீடியோ வெளியிட்டிருக்கும் பல்லாவரம் வேட்பாளர் வீரலட்சுமி சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளார். யார் இந்த வீரலட்சுமி? என்ன நடந்தது? பிரச்னை என்ன?
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. 35 வயதாகும் வீரலட்சுமி பெயருக்கேற்றாற்போல அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சிலையை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், குஷ்பு வீடு முற்றுகை ஆகிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கவனம் பெற்றவர். தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
வீரலட்சுமி தற்போது சென்னையில் ராமாபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இந்த சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பல்லாவரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில்தான், வீரலட்சுமி, தனது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளதாகவும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதில், “தமிழக சட்டமன்ற தேர்தலில், நான் மை இந்தியா கட்சி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் மார்ச் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்றபோது என் வாட்ஸ் அப் நம்பருக்கு அருவருக்கத்தக்க பாலியல் வன்புணர்சி எண்ணத்தோடு ஆபாச விடியோக்கள் வந்தன. இது போன்ற வீடியோக்களை அனுப்பி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்த நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீரலட்சுமி தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாட்களில் கைது செய்யாவிட்டால், அந்த நபரை தானே கண்டுபிடித்து தூக்கிவந்து பல்லாவரம் மார்க்கெட்டில் நிர்வாணமாக கட்டிவைத்து அந்த நபரின் ஆணுறுப்பை அறுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “தமிழக டிஜிபி திரிபாதி அவர்களுக்கும், தமிழக தேர்தல் அதிகாரி அவர்களுக்கும், சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கும் வணக்கம். எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காகவும் நான் தேர்தல் பணி செய்வதை தடுப்பதற்காகவும் என்னுடைய கைப்பேசி வாட்ஸ் அப்பிற்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்களை 3 தினத்துக்குள் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ இல்லையோ, 17 வயதில் இருந்து பெண்களின் நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடி அவர்களுக்காக நீதியை வாங்கிக்கொடுத்தவள் நான். சம்பந்தப்பட்டவனை கண்டுபிடித்து தூக்கிட்டு வந்து பல்லாவரம் சந்தையில் வைத்து நிர்வாணமாக கட்டி வைத்து ஆணுறுப்பை அறுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன். இது என் தாய் தமிழ் மீது சத்தியம்” என்று எச்சரித்துள்ளார். வீரலட்சுமி எச்சரிக்கை தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.