பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், பாரதி பாஸ்கருக்கு என்னாச்சு என்று கேட்டு பிரபலங்கள், தமிழ் உணர்வாளர்கள், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா நடுவராக இருக்கிற பட்டிமன்ற குழுவில் முக்கிய பேச்சாளராக பங்கேற்று புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். இவர் பட்டிமன்ற பேச்சாளராக மட்டுமல்லாமல் ஒரு தனியார் வங்கியில் மிக உயர்ந்த பொறுப்பில் பணியில் இருக்கிறார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பாரதி பாஸ்கரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கவுண்டர் கொடுத்து பேசும் நகைச்சுவைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பட்டிமன்றங்களில் பாரதி பாஸ்கர் தனது திருத்தமான அழகான பேச்சின் மூலம் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதுமே அவருடைய ரசிகர்கள் பலரும் பாரதி பாஸ்கருக்கு என்னாச்சு என்று சமூக ஊடகங்களில் அவருடைய உடல் நலன் குறித்து விசாரித்து தங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு என்ன ஆனது என்று அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், “பாரதி பாஸ்கர் நேற்று வழக்கம் போல அலுவல் சார்ந்த பணிகளை செய்தார். இரவு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. மூளையில் ரத்தக் கசிவு மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதா சொல்லப்படுகிறது. ஆபரேஷன் எதுவும் நடக்கல. ஆனால், ரத்தக்கசிவு பாதிப்பைச் சரி செய்றதுக்கான சிகிச்சை இன்னைக்கு காலையில் நடந்தது. பயப்பட வேண்டிய சிக்கல் இல்லை. பாரதி பாஸ்கர் சில நாட்கள் மருத்துவமனையில்தான் இருப்பார்கள். அதன் பிற்கு பாரதி பாஸ்கரின் உடல்நிலையைப் பொறுத்து அவரு வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரபலங்கள் தமிழ் உணர்வாளர்கள் பலரும் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பாரதிபாஸ்கர் தனது புத்திசாலித்தனமான நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தமிழனும் அவருக்காக எப்போதும் ஒரு புன்னகையை வைத்திருப்பார்கள். அவள் மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உலகிற்கு அவரைப் போன்ற அழகான ஆன்மா தேவை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.