ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என்று தேர்தல் பரப்புரையின் போது பிரேமலதா கூறியுள்ளார்.
வருகின்ற பிப்.27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் எல்லா கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலதா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: “ திருமகன் ஈவேரா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஈரோடு தொகுதி தேமுதிகவிற்கு புதிதல்ல. 2011-ல் தேர்தலில் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதி இது. பெரியார் மண்ணில் கட்சி துவங்கப்படும் என்று கேப்டன் தெரிவித்தார். ஈரோட்டில் இலவச மருத்துவமனை அமைத்து மக்கள் சேவையாற்றியவர் கேப்டன். மக்களை ஆடு மாடு போல் அடைத்து வைத்துள்ளனர். மக்களை அடிமைபோல நடத்துவதை தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கிற்கு வந்து பார்த்து தேர்தலை நிறுத்த வேண்டும்.
இந்த ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி, நூல்விலை, பால் விலை என அடிப்படை பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துள்ளது. ஆட்சியாளர்கள் எப்போதும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. துறை சார்ந்த பணிகளை கைவிட்டு, ஈரோட்டில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் திமுக, அதிமுக மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சியர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். நல்ல திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள். ” என்று அவர் கூறினார்