தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை பிரிவு கார்டுதாரர்கள் (Priority HouseHold) நியாயவிலை கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்க தகுதியுடையவர்கள். மாதந்தோறும், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன.
முன்னுரிமையற்ற கார்டு தாரருக்கு அதிகபட்சம், 20 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப் படுகின்றன. பொது மக்கள் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், உணவு வழங்கல் துறையின் பொது விநியோக திட்ட இணையதளத்தில், முன்னுரிமை, முன்னுரிமையற்ற அரிசி பிரிவு கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, ஏதேனும் காரணங்களை கூறி, அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அதிகாரிகளை நேரில் தொடர்பு கொள்ளும்போது, 'முன்னுரிமையற்ற சர்க்கரை கார்டுக்கு விண்ணப்பித்தால் ரேஷன் கார்டு வழங்கப்படும். 'பின், அந்த கார்டை முன்னுரிமை அரிசி கார்டாக மாற்றி கொள்ளலாம்' என, கூறுகின்றனர். இதை நம்பி, மாற்றுத் திறனாளிகள், விதவைகள் என ஏழ்மை நிலையில் உள்ள பலர் சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்காத கார்டுகளை வாங்கி உள்ளனர். அவர்களுக்கு, இலவச அரிசி உள்ளிட்ட அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை.
இதுதொடர்பாக மாநில உணவு ஆணையத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, மலைவாழ் மக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு, முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டை மட்டும் வழங்க நடவடிக்கை எடுக்க, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறையை உணவு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil