சென்னை பெருங்களத்தூர் அருகே புறவழிச்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ திடீரெனப் பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தேனிக்கு 35 பயணிகளுடன் புறப்பட்ட ஜாய் என்ற சொகுசுப் பேருந்து இரும்புலியூர் அருகே வந்தபோது, பேருந்தின் குளிர்சாதனப் பெட்டி அமைந்துள்ள பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
பேருந்தில் தீ : தப்பிய பயணிகள்
தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் பயணிகள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.
இந்த விபத்து காரணமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் தாம்பரம், இரும்புலியூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பிடித்த பேருந்தில் தீ அணைக்கப்பட்ட பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனால், 2 மணி நேரத்திற்குப் பிறகு அங்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன.