செயின் திருடனை துணிச்சலுடன் ஓடி பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு 18 வயதாகும் வரை காத்திருந்து காவல் ஆணையர் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இன்றைய நாளின் தலைப்பு செய்தியாகியுள்ளது.
சென்னை அண்ணாநகர் சூர்யாவை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. மெக்கானிக் கடையில் சிறு சிறு வேலைகளை செய்து அதில் வரும் பணத்தில் வீட்டை காப்பாற்ற்றி வந்த சிறுவன் தான் சூர்யா. திடீரென்று ஒரு சத்தம்..”திருடன்.. திருடன் செயினை பறிச்சிட்டு ஓடுரான்” சுற்றி நிற்பவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சூர்யா தான் துணிச்சலோடு திருடனை பிடித்தான்.
செயின் திருடன் கத்தியால் மிரட்டிய போதும் கொஞ்சம் கூட அசராமல் பதிலுக்கு திருடனின் மூக்கில் ஒரு பஞ்ச் கொடுத்து திருடனை மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தான். சூர்யாவின் இந்த செயலுக்கு அடுத்த 24 மணி நேரத்திலியே பாராட்டுக்கள் குவிந்தன. உள்ளூர் ஊடகங்கள், செய்தி தாள்கள் என எல்லாவற்றிலும் சிறுவன சூர்யாவின் பேச்சு தான்.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுவனை நேரில் அழைத்து மனதார பாராட்டினார். காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவனுக்கு சின்னதாக பாராட்டு விழா ஒன்றும் நடத்தப்பட்டது. அதில் சிறுவனுக்கு வெகு மதியும் வழங்கப்பட்டது. செயின் திருடனை மடக்கி பிடித்த சிறுவன் சூர்யாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் தான் சிறுவனின் பின்புலம் குறித்த தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகின.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சூர்யா தனது படிப்பை பாதியில் நிறுத்து விட்டு, மெக்கானி ஷாப் ஒன்றில் வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த வேலையில் மூலம் வரும் பணத்தை வைத்து தான் தனது தாய் தந்தையை சூர்யா காப்பாற்றி வந்துள்ளான். அந்நேரத்தில் சூர்யாவுக்கு உதவ பல கரங்கள் முன்வந்தாலும் அவை அனைத்துமே சூர்யாவிடம் சரிவர போய் சேரவில்லை. ஒரு வாரம் கழித்து மெல்ல மெல்ல சூர்யாவை மறக்கும்படியான அடுத்தடுத்த செய்திகள் வெளியாகின.
ஆனால், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுவன் சூர்யாவை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவில்லை. சிறுவனுக்கு 18 வயதாகும் வரை காத்திருந்து பணத்தைக் காட்டிலும் வாழ்வில் முன்னேறும் படியான ஒரு உதவியை சூர்யாவுக்கு செய்துள்ளார். சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் பணியை வாங்கி கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.
சூர்யாவிற்கு போலீசார் அளித்த பரிசு!
இதுகுறித்து அவர் கூறியிருப்பது, ”சூர்யாவை அவ்வளவு சீக்கிரத்தில் எங்களால் மறக்க முடியாது. 17 வயது சிறுவன் சற்றும் பயப்படாமல் ஓடி சென்று திருடனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தது சாதாரண விஷயம் இல்லை.சம்பவம் நடந்தபோது சிறுவன் சூர்யாவுக்கு 17 வயது. இதனால் அவனை எந்த வேலையிலும் சேர்க்க முடியாமல் இருந்தது. இதனால் அவனுக்கு 18 வயதாகும் வரை பொறுமையாக காத்திருந்தோம். அவனுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் தனியார் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏ.சி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இந்த பணிக்கான வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் சூர்யா தனியார் நிறுவன சீருடையுடன் வந்து ஆர்டரை பெற்றுக் கொண்டார். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை சூர்யாவிடம் வழங்கினார்.
அதன் பின்பு, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தனியார் கல்விக்குழுமம் சார்பில் ஒரு லட்சத்துக்கான காசோலையும் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.