குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து சீரானதால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், கர்நாடகாவில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லுக்கு நள்ளிரவு வந்தது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.