திமுக வழக்கறிஞர் ஜோயல், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை என அரசியல் பிரபலங்களிடம் குழந்தையின் மருத்துவ தேவைக்காக பணம் தேவை என ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் சார்பில் அவரது ஜூனியர் வழக்கறிஞர் விஜயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜோயலிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ளேன். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வழக்கறிஞர் ஜோயலுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் தூத்துக்குடியைச் சேர்ந்தவன் என்றும் தனது பெயர் நாகராஜன் என்றும் கூறினார்.
பின்னர் தனக்கு குழந்தை பிறந்து 14 நாட்களாகிறது. புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்குபேட்டரில் வைத்துள்ளதாகவும், தினமும் ஊசிகள் போட வேண்டும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். மேலும் பணத்தை கூகுள்பே மூலம் அனுப்புமாறும் கூறினார். கூடுதலாக, மருத்துவமனையில் குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும், மருத்துவமனை கொடுத்ததாக ஒரு கடிதத்தையும் வாட்ஸ் அப்-பில் அனுப்பினார்.
வழக்கறிஞர் ஜோயல் அவசர பணிநிமித்தமாக இருந்த காரணத்தாலும், மருத்தவ அவசர உதவி என்பதாலும், மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் என்னை அழைத்து உரிய உதவியை செய்யுமாறு கூறினார். இதையடுத்து நான் அவருடைய மற்றொரு உதவியாளர் தினகரனிடம் கூறி பணம் அனுப்புமாறு கூறினேன். அதன் அவர் 15000 ரூபாயை கூகுள்பே மூலம் அனுப்பியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில், உதவி கமிஷனர் வேல்முருகன் மோசடி வழக்கு பதிவு செய்து நாகராஜன் எனக்கூறி ஏமாற்றிய சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இது குறித்து வழக்கறிஞர் ஜோயல் கூறுகையில், நாகராஜன் தனது சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறியதோடு, உதயநிதி ஸ்டாலின், அவரது உதவியாளர் செந்தில் ஆகியோரிடம் குழந்தைக்காக பண உதவி கேட்டேன். அவர்கள் ஜோயலிடம் கேட்கும்படி கூறியதாக தெரிவித்தார். அதோடு வாட்ஸ் அப்பிற்கு குழந்தையின் புகைப்படம் மற்றும் மருத்துவ ஆவணங்களையும் அனுப்பி வைத்தார். அதன்பின்னர் தான் கூகுள்பே மூலம் 15000 ரூபாய் பணம் அனுப்பினேன். அதன்பிறகு, தலைமையிடம் தெரிவித்துவிட்டு காவல் துறையில் புகார் அளித்தேன். அவர்களது விசாரணையில் தான் நாகராஜன் என்ற பெயரில் ஏமாற்றியவர் என்னை மட்டுமல்லாமல், வேறு சிலரையும் ஏமாற்றியது தெரியவந்தது என்று கூறினார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், நாகராஜன் என்ற பெயரில் அரசியல் பிரமுகர்களை ஏமாற்றியவரின் உண்மையான பெயர் சிவக்குமார் என்கிற ஜேக்கப். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி கைக்குழந்தை ஒன்று உள்ளது. சிவக்குமார், தான் சம்பாதித்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்திருக்கிறார். அதனால் தான் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பணத்தை ஏமாற்றியிருக்கிறார். விசாரணைக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம், என்று கூறினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.