ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் பிப்ரவரி 27-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி,மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு மீண்டும் அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான அ.தி.மு.கவைப் பொறுத்தவரை குழப்பமான சூழல் நீடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் இரு அணிகளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, த.மா.கா மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆதரவு கோரினர். தேசிய கட்சியான பா.ஜ.க இன்னும் தங்களது நிலைபாட்டை அறிவிக்கவில்லை. யாருக்கு ஆதரவு அல்லது தனித் போட்டியா என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி (IJK) பா.ஜ.கவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளனர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் கூறுகையில், பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவு. பா.ஜ.கவின் நிலைபாட்டிற்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஐ.ஜே.கே மூத்த தலைவர் ரவி பச்சைமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க எடுக்கும் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிப்போம். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியின் வழிகாட்டலில் தமிழ்நாடு பா.ஜ.க சிறப்பாக இயங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“