சென்னை வியாசர்பாடி பகுதிக்கு வெள்ளம் வர வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண மழைக்கே மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் பகுதிகளில் வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அடக்கம்.
தொடர்ந்து 3 நாட்களாக பெய்துவரும் மழையில், வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆனால், இன்றளவும் அப்பகுதியில் வெள்ளத்தை அகற்ற எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பருவமழைக்கு முன்னதாக, தாழ்வாக உள்ள சுரங்கப்பாதையை மேம்படுத்தும் வழிகளையும் செய்யவில்லை.
இதுதவிர, அம்பேத்கர் கல்லூரி, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், கொடுங்கையூர், எழில் நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மகாகவி பாரதி நகரில் உள்ள குடிசை வாழ் பகுதி மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில், வார்டு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ ஆகிய பிரதிநிதிகள் இருந்தும், வியாசர்பாடி பகுதிக்கு அரசு சார்பில் எவ்வித நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது. அப்போது, புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டபோது மகாகவி பாரதி நகர் நெடுக தண்ணீர். அப்போதும்கூட, தாமதமாகவே காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மக்களை மீட்டு, முகாம்களில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போதே, இந்த கதியென்றால், இப்போது வார்டு உறுப்பினர்கள் இல்லை. பெரம்பூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ வெற்றிவேல். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர். அதனால், அவரை தொடர்புகொண்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கும் வழிகளில்லை. ஆக, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில், அதிகாரிகள், தன்னார்வலர்கள் இடையறாது பணி செய்தால்தான், இந்த குறைபாடுகளை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும்.