தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று மாலை அல்லது இரவு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஒடிசாவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதாகவும், அது வலுவடைந்தால் தமிழகத்துக்கு மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.