நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்தே கட்சி தொடங்கினாலும் அரசியலில் சாதிக்க முடியாது என்று நடிகரும், கமல்ஹாசனின் மூத்த சகோதரருமான சாருஹாசன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தினார். 'போர் வரும் பொழுது பார்த்துக்கலாம்' என்று கூறி, தனது ரசிகர்களை பூஸ்ட் செய்தார். ஆனால், அதன்பின் தனது காலா மற்றும் 2.o படங்களில் பிஸியான ரஜினி, நடப்பு தமிழக அரசியல் நிலவரம் குறித்தோ, அரசியலில் தனது அடுத்த செயல்பாடு குறித்தோ எதுவுமே வாய்த் திறக்காமல் இருந்து வருகிறார்.
இந்த கால இடைவெளியில் புகுந்த நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசின் செயல்பாடுகளை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார். பதிலுக்கு, அமைச்சர்களும் மிரட்டல் தொனியில் பதில் தர, எதைப் பற்றியும் கவலைப்படாத கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது மறைமுகமாக அரசியல் மேடையாகவும் மாற்றி அரசியல் பேசினார்.
இது எல்லாவற்றிற்கும் உச்சபட்சமாக, ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்த கமல், அரசியலுக்கு வர விரும்புவதாகவும், மக்கள் பணியாற்ற முனைப்போடு இருப்பதாகவும் கூறி தனது அரசியல் ஆசையை ஓப்பனாக வெளிப்படுத்தினார். கடந்த வாரம் தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த கமல், டெங்கு ஒழிப்பு குறித்து துரிதமாக செயல்பாடுமாறு அறிவுறுத்தினார்.
தனது அதிவேகமான அரசியல் நகர்வுகள் மூலம், ரஜினிக்கு முன்னதாகவே கமல் அரசியல் கட்சித் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து நடிகரும் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய போது, "சினிமாவைத் தாண்டி ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள். இரண்டு பேரும் இணைந்து கட்சி தொடங்கினாலும் அவர்களால் அரசியல் களத்தில் சாதிக்க முடியாது. பெரிய விஞ்ஞானியாக இருந்தால் என்ன, பெரிய தத்துவஞானியாக இருந்தால் என்ன, அரசியலுக்கு அது மட்டுமே போதுமா?
அரசியல் என்பது மக்களை சந்திக்க வேண்டும். இவர்கள் நமக்கு ஏதாவது செய்வார்கள் என்று மக்கள் நம்ப வேண்டும். அந்த எண்ணம் வந்தால் தான் ஓட்டு போடுவார்கள்.
சினிமா வேறு அரசியல் வேறு. சினிமாவில் இருந்த தாக்கம் இன்று அரசியலில் 10 சதவீதம் கூட இருக்காது. அரசியலில் வாக்களிப்பவர்கள் நிச்சயம் வேறு காரணங்களுக்காகவே ஓட்டு போடுவார்கள். சினிமாவிற்காக யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
சினிமா ஓட்டு என்பது 5 முதல் 6 சதவீதம் மட்டுமே. மனிதனின் திறமையை வைத்து இவரால் இதைச் செய்ய முடியும் என்று மக்கள் நினைத்து ஓட்டு போடுவதே அதிகம். நடிகராக இருந்ததால் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார், நடிகையாக இருந்ததால் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்று சொல்ல முடியாது.
தமிழக மக்கள் மனதில் திமுக, அதிமுக மட்டுமே பதிந்துள்ளது. இதனால் 3வது கட்சி உருவாகுமா என்று நான் கருதவில்லை" என்று சாருஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.