சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்து வந்தார். தற்போது அவரது போர்ஷன் முழுவதும் முடிவடைந்ததால், படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தும், மக்களுக்கு விஜயதசமி வாழ்த்தும் தெரிவித்து நேற்று ரஜினி ட்வீட் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஷூட்டிங் முடித்து வாரணாசியில் இருந்து கிளம்பிய ரஜினி, இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய ரஜினி, "வைரமுத்து தன் மீதான புகாருக்கு பதிலளித்துவிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது." என்றார்.
சபரிமலை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்; அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலங்காலமாக உள்ள மரபுகளில் யாரும் தலையிடக் கூடாது" என்றார்.
கட்சி துவக்கம் குறித்து அவர் கூறுகையில், "வரும் டிசம்பர் 12ஆம் தேதி கட்சி அறிவிப்பு இருக்காது. அதே சமயத்தில், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90% முடிவடைந்துவிட்டன. சரியான நேரம், காலம் பார்த்து கட்சி அறிவிப்பை வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
முழு விவரங்களுக்கு இணைந்திருங்கள்...