நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடி எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விவசாய சங்கத்ததினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: நாங்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினோம். அப்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு நான் முழு ஆதரவு அளிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று கூறினார். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1 கோடி எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஆனால், அந்த தொகையை எங்களிடம் வழங்க வேண்டாம், நேரடியாக பிரதமரிடம் கொடுத்து நதிகள் இணைப்புத் திட்டத்தை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினோம். அதன்படியே செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்தார் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு முன்னர் நதிகளை இணைக்க ரூ.1 கோடி தருவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.