முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரிய தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை மீறி தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாகவும் அதனால் தன்னை விடுவிக்க கோரிய நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி
2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா மற்றும் ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் ராஜகோபால் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரத்த இந்த வழக்கை, மாநில அரசு மத்திய அரசை கலந்து ஆலோசித்துதான் விடுதலை தொடர்பான முடிவை எடுக்க முடியும் என்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டபேரவையில் அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தினை முன்பே நிராகரித்து விட்டோம் என தமிழக ஆளுநருக்கு கூறிவிட்டோம். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது நடைபெறும் அரசின் அமைச்சரவை தீர்மானம் என்பது மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாதவரை பூஜ்ஜியத்திற்க்கு சமமானது என வாதிட்டார். மேலும், நளினி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே ஆயுள் தண்டனையில் சிறையில் உள்ளார் சட்டவிரோதமாக கிடையாது. எனவே, அவரது ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காத வரை ஆளுநரின் அதிகாரத்தை எவரும் கேள்வி எழுப்ப முடியாது. தமிழக அரசு 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென பரிந்துரை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்தது எனவும் நளினி சட்ட விரோத காவலில் சிறையில் இல்லை என்றும் வாதிட்ட அவர் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
நளினி தரப்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன் தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா? இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் மாநில அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுனர் கட்டுப்பட வேண்டும் என்று வாதிட்டார்
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 20-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து அனைத்து தரப்பினரையும் எழுத்து பூர்வ வாதத்தினை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை அன்றே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக சிறையில் இருப்பதாகவும் விடுவிக்க வேண்டும் என நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"