முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு, 2 வாரம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரவிச்சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. பரோலில் விட்டால் இவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த பிறகு தீர்ப்பளித்த நீதிமன்றம், மருத்துவமனை மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது, அருப்புக்கோட்டை டி.எஸ்.பியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஊடகங்களையோ அரசுயல்வாதிகளையோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், பரோல் காலங்களில் அவர் மொபைல் பயன்படுத்த தடை விதித்த நீதிமன்றம் அவரை எப்போது பரோலில் விடுவது என சிறைத்துறையே தீர்மானிக்கும் எனவும் கூறியுள்ளது.