பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளார்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், லஞ்சம் வாங்கியது உறுதியானதால் துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்த பணம் ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், மீதமுள்ள 29 லட்சத்தை செக்காகவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில், "லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது. ஊழல் துணைவேந்தரின் தவறால் பாரதியார் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்று ஊழலை ஒழியுங்கள்; இல்லை நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கி, ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை சூட்டிவிடுங்கள்!" என்று காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.